முகம்மது இசுமாயில்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் (Muhammad Ismail, முஹம்மது இஸ்மாயில் சூன் 5, 1896 - ஏப்ரல் 5, 1972) சாகிபு இந்தியாவின் பெரும் முசுலிம் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.

குடும்பம்[தொகு | மூலத்தைத் தொகு]

திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முசுலிம் மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இசுமாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான்.

பிரிட்டிசு இந்தியாவில்[தொகு | மூலத்தைத் தொகு]

தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். இந்தியாவில் முசுலிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முசுலிம் லீக் என்ற கட்சியை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் முகமது அலி சின்னா, அதனை நடத்தி வந்தார், ஜின்னாவுக்கும் இந்தியப் பிரிவினைக்கும் முஸ்லிம் லீகின் பெரும் தலைவர்களுள் ஒன்றாக இருந்த இவர், ஆற்றிய உதவி அளப்பரிது. பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சுதந்திர இந்தியாவில்[தொகு | மூலத்தைத் தொகு]

1947 இல் பாகிஸ்தான் உருவானபோது அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முசுலிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல் இந்தியன் யூனியன் முசுலிம் லீக் என்று மாற்றினார் இசுமாயில். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராசாசி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்தார்.

இந்திய அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

  • 1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.
  • 1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
  • 1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
  • 1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
  • 1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
  • 1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.

தொழில்துறை[தொகு | மூலத்தைத் தொகு]

அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.

சென்னை மாநில இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக 1946-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் குழுத் தலைவராகவும், தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார். தென்னிந்திய இசுலாமிய கழகத்தின் துணைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.[1]

மறைவு[தொகு | மூலத்தைத் தொகு]

"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25 ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடல் புண் நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1972, ஏப்ரல் 5 நள்ளிரவு 1.15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் காலமானார். அவரது உடல் அன்று காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் உட்படப் பல அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா மசூதியில் இசுமாயில் சாகிபின் உடல், இசுலாமிய மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது.

நினைவாக[தொகு | மூலத்தைத் தொகு]

காயிதே மில்லத்தில் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு “காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது.[2] பின்னர் 1996ல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது.[3] 2003ஆம் ஆண்டு அவர் நினைவாக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தைக் கட்டியுள்ளது.[4] காயிதெ மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. காயிதே மில்லத் அரசினர் பெண்கள் கல்லூரி, சென்னை மற்றும் காயிதே மில்லத் கலைக் கல்லூரி, மேடவாக்கம், சென்னை ஆகியவை அவற்றுள் சில.[5][6] காயிதே மில்லத் நினைவாக சென்னையில் காயிதே மில்லத் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Members Profile (fifth lok sabha) Muhammad Ismail
  2. Discussion under Rule 193 Flood situation caused - Parliament of India
  3. Name Of The Game Outlook Magazine, 16 July 1997
  4. Opening ceremony of "Kanniya Thendral" Quaid-E-Milleth Mohamed Ismayil Manimandapam.
  5. "About Us:Quaid–E–Millath Government College for Women". 2011-05-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-10-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "University of Madras, Aided Colleges". 2009-02-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-10-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. http://www.thehindu.com/features/metroplus/bridges-of-madras-the-concrete-connect/article4623232.ece

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=முகம்மது_இசுமாயில்&oldid=1867" இருந்து மீள்விக்கப்பட்டது